வியாழன், 18 ஆகஸ்ட், 2011

புலிக் கூண்டும், கொசு வலையும்


மனிதன் பார்த்து நடுங்கும் விலங்கு எது என்று கேட்டால் ஒவ்வொரு பதில் வரக்கூடும் - சிங்கம், புலி, பாம்பு, யானை, கரடி.. இப்படிப் பல. ஆதி காலத்தில் இவற்றைப் பார்த்து பயந்த மனிதன் தான் பின்னர் வேட்டையாடி இவற்றைக் கொன்று தன் வீரத்தை நிலை நாட்டினான்.

மனித இனத்தை அறிவியல் விலங்கின வகைகளில் ஒன்றாக வகைப்படுத்தினாலும், அதே அறிவியல் அவனது ஆறாவது அறிவைக் காரணம் காட்டி அவனை அதி ஆற்றல் வாய்ந்த, உலகத்தை, ஏன் இயற்கையைக் கூடக் கட்டி ஆளும் ஆளுமை படைத்த ஒரு 'மீ உயர்' உயிரினமாகக் காட்டுகிறது.

ஆதி காலத்தில் உணவுக்காகவும், உடைக்காகவும் விலங்குகளை வேட்டையாடிய மனிதன், நாகரிகம் அடைந்த பின் வேடிக்கைக்காகவும், தன் வீரத்தைப் பறைசாற்றிக் கொள்ளவும், கௌரவத்துக்காகவும், வேட்டையாடினான். விலங்குகளைக் கொன்றதோடு நிற்காமல், உயிருடன் பிடித்து அடைத்து வைத்து காட்சிப் பொருளாக்கினான்.

மனிதன் காட்சிப் பொருளாக்கிய முக்கியமான விலங்குகள் புலி, சிங்கம், யானை போன்றவை. இவற்றுள் புலி நமது தேசிய விலங்கு ஆதலால் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. காட்டுக்குள் இருக்கும் போது ஒரு புலியின் குரலைக் கேட்கவே அஞ்சும் மனிதன், அதைப் பிடித்து, அதற்கென ஒரு கூண்டும் செய்து அதற்குள் அடைத்ததும், அதைச் சீண்டிப் பார்ப்பதும், அதன் கூண்டுக்குள் 'பாப்கார்ன்' தூக்கி எறிந்து விளையாடுவதுமாய் புலியை ஒரு பூனைக்குட்டியைப் போல நடத்துகிறான்.


இவ்வளவு வலிமை மிக்க புலியைக் கூண்டில் அடைக்கும் ஆற்றல் இருந்த போதிலும் ஒரு அடியில் நசுங்கிச் சாகும் கொசுக்களுக்குப் பயந்து மனிதன்தானே கொசுவலைக்குள் ஒளிகிறான்?  :-)   :-)

சனி, 6 ஆகஸ்ட், 2011

பிறந்த குழந்தை செய்த கண் தானம்

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த மனதைத் தொட்ட இன்னொரு நிகழ்வு இது. பிறந்து இரண்டே நாட்கள் ஆன ஒரு பெண் குழந்தை தான் இந்த உலகை விட்டுப் பிரிந்தாலும், தன் கண்களைத் தானம் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த ஆரோக்கிய தாஸ், ஒரு சிறு உணவகத்தில்  சமையல்காரராக வேலை செய்து சம்பாதிப்பவர். தன் ஏழ்மையின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியான தன் மனைவியைப் பிரசவத்துக்காக சேர்த்திருக்கிறார். பெண் பிறப்பாள் என்ற ஆசையில் காத்திருந்தவருக்குப் பெண் குழந்தையும் பிறந்திருக்கின்றது. அவரின் மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை.

குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதாகவும், இதயத்துடிப்பு சீராக இல்லை என்றும், அதனால் குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாகவும் மருத்துவர்கள் அவரிடம் சொன்னதைக் கேட்டுக் கலங்கிப் போன அவர் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு விட்ட நம்பிக்கையுடன் எப்படியாவது தன் மகள் உயிரோடு தன்னிடம் வந்துவிடுவாள் என்று நம்பிக்கையோடு இருந்திருக்கிறார். ஆனால் பிறந்த இரண்டாம் நாள் அவரின் மகள் இறந்து விட்டாள். அப்பேர்ப்பட்ட துயரத்திலும் சிவகுமார் என்ற சமூக ஆர்வலரின் அறிவுரையினை ஏற்று அச்சிறு குழந்தையின் கண்களைத் தானம் செய்திருக்கிறார், ஆரோக்கிய தாஸ்.

"என் மகள் எங்களை விட்டுப் போய்விட்டாலும், அவளது கண்கள் இந்த உலகத்தைப் பார்க்க முடிந்தது, அது எனக்கு மகிழ்ச்சி தான்." என்கிறார் ஆரோக்கிய தாஸ்.கொடுத்தாலும் குறையாத செல்வத்தை உடையவர்கள் கூட கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். ஆனால், இந்த ஏழையின் மனது எவ்வளவு பெரியது?

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
(குறள் எண்: 223)
இதன் பொருள்:  தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

இக்குறளின் பொருள் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், உயர்குடிப் பிறந்தவர் என்றால் யாரென்பது. பணமோ, சாதியோ ஒருவனை உயர்ந்தவன் என்று இச்சமூகத்துக்கு அறிமுகப் படுத்தலாம். ஆனால், சக மனிதனின் கஷ்டம் உணர்ந்தவனே உயர்ந்தவனாக அறியப் படுவான்.

அன்னை தெரெசாவோ, ஹெலென் கெல்லரோ பிறக்கும் போதே உலகம் போற்றுபவர்களாகப் பிறந்து விடவில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான்  உலகுக்கு அவர்களை உயர்ந்தவர்களாக அறிவித்தது.
கண் தானம் செய்யுங்கள், கண் தானம் செய்யுங்கள் என்று உலகம் முழுதும் பரப்புரை செய்யும் உயர்சாதி அமைப்புகள் இந்தக் குழ்ந்தைக்கும் அதைப் பெற்றவருக்கும் சிலை எடுத்து, அவர்கள் புகழ் பாடி மரியாதை செய்யட்டும்.
இறந்து விட்ட போதிலும் இறவாச் செயல் புரிந்த அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் மரியாதை, நம் கண்களைத் தானம் செய்வது தான்.

மனம் படைத்தவர்களே! கண் தானம் செய்யுங்கள்.


 
மேலும் விவரங்களுக்கு
S.V.G.Subramanian
Deputy Manager - Eye Bank, Sankara Nethralaya,
18, College Road, Chennai - 600 006,
PH: 044 28281919 , 044 42271830, 044 28226694.
e-mail: svgs@snmail.org




.



 

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

43 வயது குழந்தை

நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த ஒரு உண்மை வாழ்க்கை பற்றிய செய்தி மனதைக் கனமாக உணரச் செய்தது. அது சென்னையில் வாழும் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சிதம் என்ற ஒப்பற்ற ஒரு தாயைப் பற்றியது.

அந்த நிகழ்ச்சியில் அவரின் குழந்தையை மையமாக வைத்துப் பேசியிருந்தாலும், எனக்கு மனதில் பதிந்தது, அந்தத் தாயின் வலிதான். துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள கணவனும் இல்லை, பெற்ற பிள்ளைகளும் இல்லாத நிலையில் தன் 65 வயதிலும் வீட்டு வேலை செய்து தன் 43 வயது பெண் குழந்தையைக் காப்பாற்றும் அவரது துணிவும், எப்படியும் தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது முனைப்பும் பகட்டான இந்த கார்ப்பரேட் உலகத்துக்குப் புரியுமா?

43 வயது என்றும் குழந்தை என்றும் முரண்பாடாகச் சொல்லப் படக் காரணம், ரஞ்சிதம் அவர்களின் பெண்ணுக்கு 43 வயது ஆனாலும் 2 வயது குழந்தைக்குரிய உடல், மன வளர்ச்சிதான் இருக்கிறது. குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது என்று எல்லாவற்றையும் அம்மாதான் செய்து விட வேண்டியிருக்கிறது இந்த 43 வயது  பெண்ணுக்கு.

வீட்டு வேலை செய்து பிழைக்கும் ரஞ்சிதம் அவர்கள், வேலை செய்யும் இடம் முதல் எங்கு சென்றாலும் தன் பெண்ணைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கஷ்டங்களை எல்லாம் விடத் தன் பெண் எல்லாரையும் போல ஒரு வாழ்க்கை வாழ முடியாமல் இருப்பதும், அவளைப் பார்ப்போர் பைத்தியம் என்று ஏளனம் செய்வதும் தான் அவருக்குச் சொல்ல முடியாத துயரமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

"நான் செத்துப் போயிட்டா நீ யார் கிட்ட இருப்ப?" என்று சிரித்துக்கொண்டே தன் குழந்தையிடம் அடிக்கடி கேட்கிறார் ரஞ்சிதம். அந்த சிரிப்பின் உள்ளே இருக்கும் வலியின் ஆழம் நமக்குப் புரிகிறது. "நான் இறந்து போனால் என் மகளும் இறந்து விட வேண்டும், அது தான் நல்லது..." என்கிறார் ரஞ்சிதம். கஷ்டப் படும் ஏழைகளுக்காக இதோ நான் இருக்கிறேன் என்று பல யுகங்களாக அறிக்கை விட்ட படியிருக்கும் ஏதாவது ஒரு சாமி ரஞ்சிதம் இருக்கும் போது இல்லாவிட்டாலும் அவரது மறைவுக்குப் பின் அவரது மகளைக் காப்பாற்றட்டும்.

இரண்டு வருடங்கள் வரை நம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியில் செல்வதே நம்மில் பலருக்குக் கஷ்டமாக இருப்பதால் வீட்டில் பார்த்துக் கொள்ள ஒருவரைத் தேடுகிறோம். ஆனால் ஒரு தாய் 43 வருடமாகத் தன் பெண்ணைச் சுமப்பது முடிகிற காரியமா? இப்படிப்பட்ட ஒரு தாய்க்கு என்ன விருது வழங்க முடியும் இந்த அரசாங்கத்தால்? என்ன அங்கீகாரம் கொடுக்க முடியும் இந்த சமூகத்தால்? பத்மபூஷண் தொடங்கி பாரத ரத்னா வரை கொடுக்கப் படும் விருதுகளுக்கு சாமான்ய மக்கள் அருகதையற்றவர்கள் என்றால் மக்களாட்சி என்பதற்கு என்ன தான் பொருள்?

இந்தத் தாயின் தேவை தன்னையும், தன் குழந்தையையும் காப்பாற்றும் அளவு சம்பாதிக்க  ஒரு நல்ல வேலை. அவர் யாரிடமும் பொருளுதவி யாசிக்க விரும்பவில்லை.  நாட்டை ஆளும் நாயகர்களோ, மக்களின் கவனத்தை ஆளும் நடிகர்களோ, பணத்தை ஆளும் பன்னாட்டு வணிகர்களோ - சக மனிதர்களில் யாராவது ஒருவராவது குறைந்த பட்சம் அவருக்கு ஒரு வேலையாவது ஏற்பாடு செய்து தர முன் வருவார்களா?

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மழையை ரசிக்க ஒரு மனது

நேற்று மதியம் பெய்த மழை சிறிதே ஆனாலும், மனதுக்கு ரொம்ப நன்றாக இருந்தது. கடந்த சில வருடங்களில் எத்தனையோ ஞாயிற்றுக் கிழமைகளில் மழை பெய்திருந்தாலும், நேற்று என்னவோ அதை ரசிக்க சில நிமிடங்கள் கிடைத்தது அதிசயமாய் இருந்தது. அப்படியென்றால், மனது மழையை ரசிக்கும் அளவு சற்று இறுக்கம் குறைந்து இருந்திருக்கிறது. பள்ளி நாட்களில் இப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் பெய்யும் மழை எவ்வளவு சுகமானதாக இருந்தது?...

அம்மா சமைத்த கோழிக்கறிக் குழம்பும், பிரட்டலும் சாப்பிட்டு முடித்த கையோடு மழை பெய்தால் இன்னும் சுகம். மாடிப்படிக் கட்டில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, சிறு குச்சியால் பல் குத்தியவாறு மழைச் சாரலை அனுபவித்துக் கொண்டே வீதியை வேடிக்கை பார்ப்பது மனதுக்கு ரொம்பப் பிடித்த விஷயங்களில் ஒன்று.

பேப்பர் கப்பல் விடுவதும்,வீதியில் ஓடும் கணுக்காலளவு மழை நீரில், ஆங்காங்கே வேட்டைக்கார வேம்புவின் தொப்பி போல் தொப்பியணிந்த போலீஸ்காரர்கள் விரைந்து செல்வது போல காற்றுக் குமிழ்கள் ஓடி உடைந்து மறைவதைப் பார்த்துச் சிரிப்பதுமாய்ப் போகும் நேரம்.

நல்ல மழைக் காலங்களில் இப்படி மழை வரும் போது நினைத்துக் கொள்வேன், "இதே போல நாளைக் காலைப் பள்ளிக்குக் கிளம்பும் நேரம் மழை வந்தால் நல்லது. ஒரு நாள் லீவு கிடைக்கும்...." ஆனால், மறுநாள் காலை தெளிவாக வெய்யில் அடிக்கும்.

பள்ளியிலிருந்து திரும்பும் போது லேசாகத் தூறும் மழையில் மனதுக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்தவாறு சைக்கிளை மிதித்தால் ஏதோ அப்படி ஒரு சந்தோஷம் மனதைக் கவ்வும். மழையில் நனைந்து குளிர்ந்த உடலைத் துவட்டி விட்டு காய்ந்த மாற்றுடை அணியும் போது லேசாகப் பரவும் வெதுவெதுப்பு.

அது எப்படியோ, பள்ளிக் காலங்களில் மழை பெய்திருந்தாலும், வெய்யில் அடித்திருந்தாலும் இப்போது நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே இனிமையான நினைவுகளாகத் தான் இருக்கின்றன. கடந்த கால நினைவுகள் போல் நிகழ்கால நினைவுகள் ஏன் இனிப்பதில்லை?