புதன், 20 ஜூலை, 2011

என் ஊரில் ஏன் கடல் இல்லை?

நான் சிறு வயது முதல் என் அப்பாவிடம் கேட்கும் கேள்வி இது. "நம்ம ஊரில் ஏம்ப்பா கடல் இல்லை?..."  அப்பா சொன்ன பதில் எனக்கு சமாதானம் சொல்லவில்லை. கல்லூரிப் படிப்பு எல்லாம் முடித்த பின்னும் இப்போதும் கூட என் மனது அவ்வப்போது கேட்கிறது, "என் ஊரில் ஏன் கடல் இல்லை?"

கடல் என்றால் என்ன என்று என் அப்பாவைக் கேட்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் எப்படி பதில் சொல்லியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். கடலை வர்ணிக்கத்தான் முடியும், வரையறை எப்படி சொல்வது. நான் ஏன் அப்பாவிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன்?

நான் முதன் முதலில் கடல் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என் பள்ளி விடுமுறைக்கு சித்தி வீட்டுக்குச் சென்ற போது வெயில் தாழாத ஒரு மாலைப் பொழுதில் அக்கா, அண்ணன், சித்தி பிள்ளைகளோடு பேருந்தில் சென்று இறங்கி நடந்து சென்றோம்... போக போக மண் தரை முடிந்து, மணல் தெரிய ஆரம்பித்தது. பொறுமையிழந்த நான் எப்போது தான் கடல் வரும் என்று கேட்டேன். அண்ணன், "இதோ... வந்து விட்டது.. உனக்கு அந்த சத்தம் கேட்கிறதா?" என்று கேட்ட போது தான் கவனித்தேன், உறுமல் போன்ற ஒரு ஒலியை.. தூ...ரத்தில். நடக்க நடக்க ஒலி பேரோசையாய் ஆகிக் கொண்டே வந்தது. ஆர்வத்தாலும் அந்த பேரோசை கொடுத்த பயத்தாலும் இதயத் துடிப்பு அதிகரித்தது தெரிந்தது. சற்று தூரத்தில் தரை ஒரு மேட்டில் போய் முடிந்தது. அந்த மேட்டில் ஏறியதும் பார்வையிலும் காதுகளிலும் வந்து அறைந்தது கடலின் பிரம்மாண்டம். அசைவற்று நின்ற எனக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. 'உலகம் இவ்வளவு பெரியதா?'

கடலை நான் சந்தித்த அந்த முதல் அனுபவம் ஆச்சரியங்கள் நிரம்பியது. எவ்வளவு தண்ணீர்!.. தண்ணீரால் இவ்வளவு பெரிய சத்தம் போட முடியுமா!.. எவ்வளவு தூரத்துக்கு மணல் தரை.. அலைகள் வருடக் கணக்காக ஓயாமல் அடிக்குதாமே, அது எப்படி!.. இவ்வளவு பெரிய அலைகளில் அந்த சிறிய படகுகள் எப்படி கவிழாமல் போகின்றன!. இன்னும் எத்தனையோ ஆச்சரியங்கள். அந்த உப்புக் காற்றின் பிசுபிசுப்பு, கால் நனைத்துச் சென்ற அலைகள், தண்ணீர் பின் வாங்கியதும் மறைந்து போகும் நுரை, அழகழகான கிளிஞ்சல்கள், ஆங்காங்கே ஓடி ஒளியும் நண்டுகள்.... எல்லாமே புதியதாய், மனதைக் கவர்ந்துவிடுவதாய்... கடல் பேரழகு வாய்ந்த ஒரு தனி உலகம்.

அப்பேர்ப்பட்ட கடல் என் ஊரிலும் இருந்தால் நான் தினம் தினம் சென்று விளையாடலாமே! என்னை போல் எவ்வளவு பேர் நினைத்திருப்பார்கள்? எல்லாருக்காகவும் தான் கேட்கிறேன்... ஒவ்வொரு ஊரிலும் கடல் ஏன் இல்லை?

கருத்துகள் இல்லை: