வியாழன், 21 ஜூலை, 2011

காக்கைகளிடமிருந்து கற்றுக் கொள்ள...

ஒரு சிற்றூரிலிருந்த குழந்தைப் பருவத்திலிருந்து பெருநகரத்தில் வசிக்கும் இந்த நாள் வரை எந்த ஒரு நாளிலும், ஒரு நாளின் எந்த ஒரு நேரத்திலும் என் ஜன்னலுக்கு வெளியே என்னால் பார்க்க முடிகிற ஒரு பறவை என்றால் அது காக்கை தான். பொதுவாக காக்கையைப் பலர் பறவை என்ற பட்டியலில் சேர்ப்பது இல்லை. பறவை என்றால் அழகாக இருக்க வேண்டும், என்றும் காக்கைகளுக்கும் அழகுக்கும் வெகு தூரம் என்றும் பலர் நினைக்கிறார்கள். காக்கையைப் பற்றிப் பாடியவர்களும் அதன் அழகைப் பற்றிப் பாடியதாய் நினைவில்லை.

சிறு வயதிலிருந்தே காக்கைகளைப் பார்த்து வியப்பதற்கு எனக்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. அதன் மெல்லிய உடல்வாகு (ஆங்கிலத்தில் 'slim and sleek'  என்று  கூறலாம்), லேசான சாம்பல் நிறத்தில் மிக மென்மையான கழுத்து, smooth landing என்று கூறுவது போன்ற அது தரை வந்தமரும் விதம், மனிதர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் புரிந்த அதன் புத்திசாலித்தனம் இப்படி எவ்வளவோ.

என் பள்ளிப் பருவத்தில், என் வீட்டுக் கொல்லையில், காய்ந்து உதிர்ந்த இலைகளைக் கூட்டி ஒதுக்கிய குப்பைகளில், காக்கைகள் கூடு கட்டுவதற்காக மெல்லிய குச்சிகளைத் தேடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கைதேர்ந்த கொத்தனார் நல்ல செங்கல்லைத் தேர்ந்தெடுக்கும் கவனத்தோடு தன் அலகால் குச்சிகளை எடுத்து ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அலகாலேயே தடவிப் பார்த்து சீராகவும் வலுவாகவும் இருக்கும் குச்சிகளை மட்டும் தேர்வு செய்யும் காக்கைகளின் அறிவையும், தொழில்திறனையும் பார்த்து அதிசயித்து இருக்கிறேன்.

பறவை தன் குஞ்சுக்குத் தன் அலகினால் தான் உணவு ஊட்டும்  என்பதையும் முதலில் காக்கைகளைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இன்று வரை தமிழ்நாட்டில் குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களின் முதல் நண்பன் காக்கை தான். "காக்கா பார்... காக்கா..." என்று அம்மா சொல்லி காக்கையைக் காட்டி அதற்கும் கொஞ்சம் சோறு போடும்போது அந்தக் குழந்தை கற்றுக் கொள்வது தினமும் காக்கைக்குச் சோறிட வேண்டும் என்ற அந்த சடங்கை அல்ல... வாழ்க்கையை... வாழ்க்கையின் மிக முக்கியமான சாரங்களை.

ஆனால், ஒன்று மட்டும் சற்றே மனதை நெருடுகிறது.
நமக்குச் சிறு வயதில் சொல்லப்பட்டது போல் தனக்குக் கிடைத்த உணவைத் தன் இனத்தோடு பகிர்ந்து கொள்வதை விடுத்துப் பிற காக்கைகளை விரட்டி விட்டு சில காக்கைகள் தான் மட்டும் உண்ணுவதைப் பார்த்திருக்கிறீர்களா?.....
எனக்கென்னவோ மனிதன் காக்கைகளைப் பார்த்துக் கற்றுக் கொண்ட காலம் போய் காக்கை மனிதனைப் பார்த்து கற்றுக் கொள்கிற காலம் துவங்கி விட்டது என்று தான்  தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: